சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் |
ஏழாம் திருமுறை |
7.96 திருவாரூர்ப் பரவையுண்மண்டளி பண் - பஞ்சமம் |
தூவாயா தொண்டுசெய் வார்படு துக்கங்கள்
காவாயே கண்டுகொண் டார்ஐவர் காக்கிலும்
நாவாயால் உன்னையே நல்லன சொல்லுவேற்
காவாவென் பரவையுண் மண்டளி யம்மானே.
|
1 |
பொன்னானே புலவர்க்கு நின்புகழ் போற்றலாம்
தன்னானே தன்னைப் புகழ்ந்திடுந் தற்சோதி
மின்னானே செக்கர் வானத் திளஞாயி
றன்னானே பரவையுண் மண்டளி யம்மானே.
|
2 |
நாமாறா துன்னையே நல்லன சொல்லுவார்
போமாறென் புண்ணியா புண்ணியம் ஆனானே
பேய்மாறாப் பிணமிடு காடுகந் தாடுவாய்க
காமாறென் பரவையுண் மண்டளி யம்மானே.
|
3 |
நோக்குவேன் உன்னையே நல்லன நோக்காமைக்
காக்கின்றாய் கண்டுகொண் டார்ஐவர் காக்கிலும்
வாக்கென்னும் மாலைகொண் டுன்னை என்மனத்
தார்க்கின்றேன் பரவையுண் மண்டளி யம்மானே.
|
4 |
பஞ்சேரும் மெல்லடி யாளையோர் பாகமாய்
நஞ்சேரும் நன்மணி கண்டம் உடையானே
நெஞ்சேர நின்னையே உள்கி நினைவாரை
அஞ்சேலென் பரவையுண் மண்டளி யம்மானே.
|
5 |
அம்மானே ஆகம சீலர்க் கருள்நல்கும்
பெம்மானே பேரரு ளாளன் பிடவூரன்
தம்மானே தண்டமிழ் நூற்புல வாணர்க்கோர்
அம்மானே பரவையுண் மண்டளி யம்மானே.
|
6 |
விண்டானே மேலையார் மேலையார் மேலாய
எண்டானே எழுத்தொடு சொற்பொருள் எல்லாமுன்
கண்டானே கண்டனைக் கொண்டிட்டுக் காட்டாயே
அண்டானே பரவையுண் மண்டளி யம்மானே.
|
7 |
காற்றானே கார்முகில் போல்வதோர் கண்டத்தெங்
கூற்றானே கோள்வளை யாளையோர் பாகமாய்
நீற்றானே நீள்சடை மேல்நிறை வுள்ளதோர்
ஆற்றானே பரவையுண் மண்டளி யம்மானே.
|
8 |
செடியேன்நான் செய்வினை நல்லன செய்யாத
கடியேன்நான் கண்டதே கண்டதே காமுறுங்
கொடியேன்நான் கூறுமா றுன்பணி கூறாத
அடியேன்நான் பரவையுண் மண்டளி யம்மானே.
|
9 |
கரந்தையும் வன்னியும் மத்தமுங் கூவிளம்
பரந்தசீர்ப் பரவையுண் மண்டளி யம்மானை
நிரம்பிய ஊரன் உரைத்தன பத்திவை
விரும்புவார் மேலையார் மேலையார் மேலாரே.
|
10 |
திருச்சிற்றம்பலம் |